“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்கின்றார் அவ்வையார். அதாவது அவரவர் கற்ற நூல்களைப் பொறுத்தே அறிவுத்திறன் அமையும். இதற்கு முதுகெலும்பாய் திகழ்வது நூலகங்களே ஆகும். மனிதனது அறிவாற்றல் விருத்தி என்பது எந்தளவு புதிய விடயங்களை உள்வாங்கி இருக்கின்றனர் என்பதிலேயே தங்கியுள்ளது. நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு பெருகும். மதிப்பு கூடும். கடந்த கால மற்றும் நிகழ்கால கலாச்சாரப் பதிவுகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஒரு இடம் நூலகம் எனலாம். மேலும் மனிதகுல வரலாறு மற்றும் சிந்தனைகளின் எழுத்துப் பதிவுகளாக அமைந்திருக்கும் நூல்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சேமித்து வைக்கப்பட்டு ஒருவருக்கோ பலருக்கோ வாசிக்க இடமளிக்கும் போது அவ்விடம் நூலகம் என்றழைக்கப்படுகிறது. மாணவர்களும், நூலகமும் உற்ற நண்பர்கள் ஆகும் போது மாணவர்களுக்கு அறிவுப் பஞ்சமே கிடையாது. இன்று பாடசாலைகளில் நூலகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் பாடப்புத்தகங்களை தவிர ஏனைய நல்ல புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க முடிகின்றது. மாணவர்களிடத்தில் நூலகப் பயன்பாட்டுப் பழக்கத்தை ஏற்படுத்தல், அகலவாசித்தல், ஆழவாசித்தல் என்பவற்றில் ஆர்வத்தை ஊட்டுதல் என்பத...